கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டிலுள்ள 3 வீடுகளில் முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாக கூறி பேரூராட்சி தலைவி கிருத்திகா தலைமையில் ஊழியர்கள் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இதனை கண்டித்து அந்தப் பகுதி மக்கள் இன்று காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவலின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் பேரூராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி குடிநீர் இணைப்பை துண்டித்த ஊழியர்களை சஸ்பெண்ட் செய்வதாகவும் மேலும் துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை மறுபடியும் இணைப்பு கொடுத்து விடுவோம் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக நிர்வாக அதிகாரி தலைமையில் மூன்று வீடுகளில் துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மீண்டும் திறந்து விடப்பட்டன இதனையடுத்து பேரூராட்சி தலைவியின் தரப்பினர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனரை சந்தித்து திறந்துவிடப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் அடைக்க கோரிக்கை வைத்தனர். இதனால் உதவி இயக்குனரின் உத்தரவின்பேரில் நிர்வாக அதிகாரி மீண்டும் இரண்டு வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்தார். ஒரு வீட்டில் குடிநீர் இணைப்பை துண்டிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சாயிலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேரூராட்சி தலைவி கிருத்திகா தலைமையில் 7 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீதமுள்ள ஒரு வீட்டிலும் குடிநீர் இணைப்பு துண்டிக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு கவுன்சிலர் விஜிலா மயங்கி விழுந்தார். இதனால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பேச்சுவார்த்தையில் பேரூராட்சி தலைவி சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று டிஎஸ்பி உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுபோல் தென்தாமரைகுளம் பேரூராட்சி நிர்வாக அலுவலரும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment