கன்னியாகுமரி: படகு சேவை ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

கன்னியாகுமரி: படகு சேவை ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

கன்னியாகுமரியில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 


சுற்றுலா பயணிகள் குவிந்தனர் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கோடைவிடுமுறையான தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையான நேற்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். 


படகு சேவை நிறுத்தம் பொதுவாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது. அதன்படி படகில் சவாரி செய்ய நேற்று காலை படகுத்துறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர்.


ஆனால் அந்த சமயத்தில் கடலில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. அதாவது கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்பதை கருதி படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 


ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீர்மட்டம் வழக்கமான நிலைக்கு வந்ததும் 9 மணிக்கு தாமதமாக படகு சேவை தொடங்கியது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் பயணம் செய்தனர். மழையை பொருட்படுத்தாமல்... இதற்கிடையே கன்னியாகுமரியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். மேலும் கன்னியாகுமரியில் சன்னதி தெரு, காந்தி மண்டபம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 


சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment