கன்னியாகுமரி விற்பனைக்குழு செயலாளர் பி. என். எழில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின்கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் காலமானது கடந்த ஜூலை 31 - ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தேங்காய் விலை வீழ்ச்சியில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாத்திட தமிழக அரசு கேட்டு கொண்டதை தொடர்ந்து வருகிற 30-ந் தேதி ( செப்டம்பர் ) வரை கொள்முதல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் வட சேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரவை கொப்பரை கொள்முதல் நடைபெற்று வருகிறது.
கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்துக்கேற்ப நன்கு உலர வைத்து சுத்தமான கொப்பரைகளை தரம் பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரவை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்படும். மேலும் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
தகவல்களுக்கு 7603859338 (வடசேரி ), 6382835059 (திங்கள்சந்தை ) ஆகிய எண்களில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment