இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் இன்று 11-10-2022 வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இராஜாக்கமங்கலம் ஒன்றியம் சூரங்குடி பகுதியில் சம்பகுளம் உள்ளது.
பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையிலிருந்து வருகின்ற தண்ணீரானது அனந்தனார் கால்வாய் வழியாக சம்பகுளத்திற்கு வருகிறது. இக்குளத்திலிருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீரானது சம்பகுளம் சாணல் வழியாக சுற்று வட்டாரப் பகுதிகளான ஈத்தாமொழி, புதூர், மேல கிருஷ்ணன்புதூர், நைனாபுதூர், புத்தளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
மேலும் இச்சாணலின் மூலம் வருகின்ற தண்ணீரினால் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்பு தன்மை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அனந்தனார் கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் சம்பகுளம் முழு கொள்ளவை எட்டிய நிலையிலும், கடந்த 1 மாத காலமாக சம்பகுளம் சாணலில் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுவதை காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனால் இச்சாணலின் வருகின்ற தண்ணீர் மூலம் பயனடைந்து வந்த நெற்பயிர் மற்றும் தென்னை விவசாயம் செய்த விவசாயிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரின் உப்பு தன்மையும் அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகின்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
எனவே விவசாயிகளின் நலன் கருதியும் பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதத்திலும் முழு கொள்ளளவை எட்டியுள்ள சம்பகுளத்திலிருந்து, சம்பகுளம் சாணல் வழியாக உடனே தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment