கன்னியாகுமரிக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 August 2022

கன்னியாகுமரிக்கு ஏன் சுற்றுலா வந்தோம் என முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி பகுதியில்  தள்ளுவண்டிக்காரர்கள் கடை நடத்தும் அடாவடித்தனத்தால் சுற்றுலா பயணிகள் தலைதெறிக்க ஓடும் அவல நிலை... சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதோடு, அங்கு கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை, வானுயர வள்ளுவர் சிலை போன்றவற்றை ரசிப்பதோடு  கடற்கரைகள், பூங்காக்கள், சூரிய உதயம் மற்றும் அஸ்தமம் போன்ற இயற்கை காட்சிகளை ரசித்து செல்வது வழக்கம், சபரிமலை ஐயப்ப சாமி கோவில் சீசன் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் இருக்கும், அதன்படி வரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் அமைக்கப்பட்டு அவை ஏலம் கொடுக்கப்பட்டுள்ளது.
 

ஆனால் பேரூராட்சி கடைகளுக்கு நிகராக எந்தவித முன்பணம் கட்டாமல் தள்ளுவண்டிக்காரர்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக தங்களது தள்ளு வண்டிகளை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக காந்திமண்டபம் முன்பு இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடை வியாபாரிகளின் அடாவடியால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தலைதெறிக்க ஓடுகின்றனர்.
 

சுற்றுலாப்பயணிகள் காந்திமண்டபம் முன்பு நின்றவாறு புகைப்படம் எடுத்து கொள்வது வாடிக்கையான ஒன்று.ஆனால் தள்ளுவண்டி கடை வியாபாரிகளின் அடாவடி தனத்தால்  முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் புலம்பியபடி வேறு வழியின்றி திரும்பி செல்கின்றனர்.
 

மேலும் தொழில் போட்டி காரணமாக சுற்றுலா பயணிகளையும், வேறு கடைகளுக்கு செல்லாமல் தடுப்பதும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படும் வகையில் அருவறுக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போடுவதாலும், சுற்றுலா பயணிகளின் கைகளை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக தங்கள் கடைகளில் பொருட்களை வாங்க வலியுறுத்துவதால்  பல்வேறு நேரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை உருவாகி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது குறித்து  புகார் அளித்தால் பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் தள்ளுவண்டிகளை அகற்ற கூறிவிட்டு, தங்கள் பணி முடிந்தது என செல்வதால், தள்ளுவண்டிக்காரர்கள் எப்போதும் போல் கடைகளை அமைத்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.


பல நேரங்களில் பெண்கள் குழந்தைகள் முன் நின்று அருவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்துவதால் "தெரியாத்தனமா" கன்னியாகுமரிக்கு வந்து விட்டோம் என கூறி சுற்றுலா பயணிகள் தலை தெறிக்க ஓடும் அவல நிலை தொடர் கதையாகி வருகிறது. சர்வதேச சுற்றுலா தலத்தின் பெருமையையும், புகழையும் உலகறியச் செய்யும் பணியில் ஈடுபடும் சுற்றுலாத்துறை மௌனம் காப்பது, தள்ளுவண்டி கடைக்காரர்களால் சுற்றுலாத் துறை ஊழியர்கள் நன்கு கவனிக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 

எது எப்படி இருந்தாலும் கன்னியாகுமரிக்கு என்று ஒரு பண்பும் மாண்பும் உள்ளது இதனை காப்பாற்ற சுற்றுலா துறையும் மாவட்ட நிர்வாகமும் எந்தவித உள்நோக்கமும் இன்றி நேரடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திரும்புவார்கள் என்ற நிலையும் கோரிக்கையும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment