கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாளன்று (21.10.2022) காலை 10.30 மணிக்கு சென்னை ஓய்வூதிய இயக்குநர் அவர்களின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக 3-வது தளத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குறைகளை பரிசீலனை செய்வதுடன் அவர்கள் கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு செய்திட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு துறை அலுவலகங்கள், அரசு நிதி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய பலன்கள் தீர்வு செய்யப்படாமல் இருந்தால் அவ்விபரங்களை இரட்டை பிரதிகளில் 06.10.2022 பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும்.
06.10.2022-க்கு பின்னர் வரும் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஓய்வூதியதாரர் தங்கள் மனுவில் ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய புத்தக எண். (PPO No) ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர், கோரிக்கை நிலுவையில் உள்ள அலுவலகம், ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலம் ஆகிய விபரங்களுடன் கோரிக்கையைத் தெரிவிக்குமாறு ஓய்வூதியதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதில் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அங்கு ஓய்வூதியம் பெறுவோரின் கோரிக்கை மனுக்கள். மாநில அரசு சார்பற்ற துறைகளில் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மின்சார வாரியம், போன்ற கழகம் மற்றும் வாரியங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment