கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்,சோபியா தம்பதியரின் மகன் அஸ்வின் (11 வயது ) குழித்துறை அருகே அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவனுக்கு, அப்பள்ளியில் படித்த மற்றொரு மாணவர் குளிர்பானம் கொடுத்ததாக தெரிகிறது.
அந்த குளிர் பானத்தை குடித்த சிறுவனுக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் "எண்டாஸ்கோப்பி" சோதனை செய்ததில் மாணவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குணமடைய 3 அல்லது 6 மாதம் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

No comments:
Post a Comment