தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 28-வது முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை வரவேற்கும் விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பேச்சு
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பினை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன் என தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 28-வது முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை வரவேற்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பேசினார்.
தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 28-வது முதலாம் ஆண்டு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா இன்று 11-11-2022 காலை இக்கல்லூரியில் வழக்கறிஞர் தர்மராஜ் ஆடிட்டோரியத்தில் சி.எஸ்.ஐ மார்த்தாண்டம் சேகரத்து போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.எம்.பென்சர் பிராதாப்சிங் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்ததாவது, ஞானம் (Wisdom), அறிவு (Knowledge), புத்தி (Intelligent) குறித்து சிறப்பான கருத்துக்களை இங்கு போதகர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தெரிவித்தார்கள்.
அவர் கூறிய கருத்துக்கள் சிறப்பானவை, உண்மையானவை. இந்நாள் மங்களகரமான நாள். இக்கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அமைதியான சிறந்த இயற்கை சூழல் நிறைந்து காணப்படும் இவ்விடத்தில் இக்கல்லூரி அமைந்துள்ளது. நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது இந்திய குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் தமிழகம் வந்த போது அவரோடு பயணித்த வேளையில், அவரை விஞ்ஞானி என்று கூறினேன்.
அப்போது அவர் நான் விஞ்ஞானி அல்ல என்று கூறியதோடு, என்னிடம் நீங்கள் வழக்கறிஞர், அமைச்சர் உண்மையான விஞ்ஞானி யார் என்று கூறுங்கள் என்றார். மேலும் மனிதர்களுக்கு கண், காது, மூக்கு இவற்றை படைத்தவர் யார் என்றார். திகைத்து போன என்னிடம் இவற்றை படைத்த இறைவன் தான் உண்மையான விஞ்ஞானி என்று கூறினார்.
மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கிராமப் பகுதிகளிலிருந்தும் வந்து இக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து எதிர்கால நலன் கருதி நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும். தற்போது கணிணி படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதற்கு இடம் கிடைப்பது அரிது. முந்தைய காலத்தில் கலை மற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது.
இதுதான் கல்வி. வாழ்க்கையில் முன்னேற கல்வி இருந்தால் மட்டுமே முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பினை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். மாணவ, மாணவிகள் நேரத்தை வீணடிக்காமல் சிறந்த முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளை படைக்க வேண்டும். நாட்டிற்கும், தமிழ் மண்ணுக்கும், வீட்டிற்கும் பயன் உள்ளவர்களாக திகழ வேண்டும் என அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். விழாவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில், கௌரவ விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் கலந்து கொண்டு பேசி முதலாமாண்டு மாணவர்களுக்கு இனிப்புகளையும் அவர் வழங்கினார். விழாவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிர்வாக செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், சி.எஸ்.ஐ டயோசிசன் வளர்ச்சி திட்ட இயக்குனர் லாரன்ஸ், செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் எபனேசர் ஜோசப், சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி நிதி காப்பாளர் பொன் சாலமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
கல்லூரி பாடப்பிரிவு துறைகள் குறித்து சம்மந்தப்பட்ட தலைமை பேராசிரியர்கள் விளக்கி பேசினார்கள். தலைமை பேராசிரியர் டாக்டர் டி.எஸ்.வி.நாக்சன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment